Sunday, June 29, 2008

நெல்சன் மண்டேலா-8

அன்று அக்டோபர் 2, 1962. தென் ஆப்பிரிக்காவின் புகழ்மிக்க பிரிட்டோரியா நீதிமன்றம் பரபரப்பாக இருந்தது. இன்னும் சற்று நேரத்தில் போலீஸாரால் அங்கு அழைத்து வரப்படவிருக்கும் தங்களது தன்னிகரற்ற தலைவனைக் காண, பெரும் ஆரவாரத்துடன் நீதிமன்றத்தில் கூடியிருந்த மக்கள் கூட்டத்தின் நடுவே தன் இரண்டு சிறு பெண் குழந்தைகளோடு, வின்னி மண்டேலா! சைரன் அலறலுடன் விரைந்து வந்த போலீஸ் வாகனத்தில் இருந்து, யாரும் எதிர்பாராத வகையில் உடலில் புலித்தோலைப் போர்த்தியபடி, தங்களது புராதன உடையில், கூட்டத்தின் நடுவே ஒரு சிங்கம் போல நடந்து வந்தார் மண்டேலா. வெள்ளை நீதிபதிகளும் வக்கீல்களும் அவரது இந்தத் தோற்றத்தைக் கண்டு சற்று மிரளத்தான் செய்தனர். மண்டேலா தனது வலக் கையை உயர்த்தி, கூட்டத்தை நோக்கி 'அமெண்டா' என்று முழக்கமிட, பதிலுக்குக் கூட்டமும் உற்சாகத்துடன் 'அமெண்டா' எனக் கூச்சலிட்டது. 'அமெண்டா' என்றால் உறுதி என்று பொருள்.





அனுமதி இல்லாமல் வெளிநாடுகளுக்குச் சென்றார் என்பதற்காக, மண்டேலாவுக்கு ஐந்து வருட சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பு எழுதியது நீதிமன்றம். இனியும் மண்டேலாவை உயிரோடு வெளியேவிட்டால், அது எதிர்காலத்தில் தனக்குப் பெரும் ஆபத்தாகிவிடும் என்று எண்ணியது தென் ஆப்பிரிக்க அரசு. அதற்குத் தோதாக அடுத்த சில நாட்களில், 'கெரில்ல' ஆயுதப் பயிற்சி வீரர்கள் சிலரை போலீஸார் கைது செய்தனர். அரசுக்கு எதிராகப் போராடிய அந்த வீரர்களுடன் மண்டேலாவுக்கு தொடர்பு இருந்ததாக, அவருக்கு மரணத்தையே தீர்ப்பாக எழுதக் காத்திருந்தது. இதற்கு உலக நாடுகளிடமிருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன. கிரிக்கெட் அமைப்புகள் தென் ஆப்பிரிக்காவை முழுமையாக ஒதுக்கிவைத்தன. காமன்வெல்த் நாடுகள் தங்களது அமைப்பிலிருந்து தென் ஆப்பிரிக்காவை வெளியேற்றின. மண்டேலாவின் விடுதலைக்காக லண்டன் மக்கள் இரவு முழுவதும் ஜெபம் செய்தனர். அன்றைய ரஷ்யப் பிரதமர் பிரஷ்நேவ், மண்டேலாவை விடுதலை செய்யச் சொல்லிக் கடிதம் எழுதினார். அமெரிக்க வெளி விவகாரத் துறை அமைச்சகம்கூட மண்டேலாவை மன்னிக்கும்படி கடிதம் எழுதியது. இப்படியாக உலகின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் மண்டேலாவுக்கு ஆதரவு குவிந் தாலும், தனது கீழ்மையான புத்தியிலிருந்து தென் ஆப்பிரிக்க அரசு ஒரு இம்மிகூடப் பின்வாங்கவே இல்லை.

ஜூன் 12, 1964... தீர்ப்பு நாள்! வழக்கு விசாரிக்கப்பட்ட பிரிட்டோரியா நீதிமன்றத்தில் அனை வரின் முகங்களும் இருண்டிருந்தன. குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டார் மண்டேலா. அப்போது அவர் அங்கு நிகழ்த்திய நான்கு மணி நேர நீண்ட நெடிய உரை, உலக நாடுகள் அனைத்தையும் சிலிர்க்கவைத்தது. 'நான் வெள்ளையர்களின் அதிகாரத்தை எதிர்க்கிறேன். அதே போல் கறுப்பர்களின் அதிகாரத்தையும் மறுக்கிறேன். தென் ஆப்பிரிக்கா, ஒரு சுதந்திர பூமி! இங்கு அனைத்து மக்களும் சமமான அதிகாரத்துடன், சகோதரர்களாகக் கைகோத்து வாழ வேண்டும். இதுவே என் கனவு. எனது இந்தக் கனவு முழுமையாக நிறைவேறும்வரை, எனது போராட்டம் தொடரும். இதற்காக என் உயிரையும் இழக்கச் சித்தமாக இருக்கிறேன்' என்று உயரிய மனிதத் தத்துவத்தை வெளிப்படுத்திய அந்த உரைதான், மண்டேலா எனும் சாதாரண தலைவனைப் பிற்பாடு வரலாற்று நாயகனாக மாற்றின.



ஆனால் அன்றோ, அந்த வெள்ளை இன வெறி அரசுக்கு இந்த மகத்தான மனித நேயம் குறித்தெல்லாம் யோசிக்கவும் மனமில்லை. மண்டேலாவுக்கு மரண தண்டனை விதித்தால், எங்கே உலக நாடுகளின் பகைக்கு தான் ஆளாக நேருமோ எனும் பயம் காரணமாக, தனது எண்ணத்தில் சிறு மாற்றம் செய்துகொண்டது. 27 வருட ஆயுள்தண்டனையை மண்டேலாவுக்கும் அவரது சகாக்களுக்கும் விதித்துத் தீர்ப்பு எழுதியது.

கேப் டவுன் கடற்கரையிலிருந்து 7 கி.மீ. தொலைவில் இருந்த ராபன் தீவுச் சிறைக்கு மண்டேலாவும் அவரது சகாக்களும் கொண்டுசெல்லப்பட்டனர். தனது அறையில் இருந்த சின்னஞ் சிறிய ஜன்னல் வழியாகத் தன் மேல் விழும் சூரிய வெளிச்சத்தை ரசித்தார் மண்டேலா. அதே ஜன்னலின் வழியேதான் அவர் தனது மக்களின் காற்றைச் சுவாசித்தார்; பறவைகளின் சத்தத்தைக் கேட்டு மகிழ்ந்தார். அதே போல், தினமும் மாலையில் சூரியனின் அஸ்தமனத்தை ஜன்னலினூடே பார்த்து நெகிழ்ந்தார். ஹேண்டல், சாக்கோஸ்கி போன்ற இசை மேதைகளின் இசைக்கோவையைக் கேட்பதும் தன் ஆரம்ப காலக் கிராமத்து வாழ்க்கையை நினைத்துப் பார்ப்பதுமே, சிறையில் அவருக்குப் பிடித்தமான பொழுதுபோக்குகளாக இருந்தன. தொடர்ந்து பால்ஸ்மூர், விக்டர் வெர்ஸ்டர் என வெவ்வேறு சிறைகளுக்கு அவர் கொண்டுசெல்லப்பட்டார். நாட்கள் நகர்ந்தன. ஆனால், அவரது எண்ணத்தின் உறுதி மட்டும் சற்றும் குலையாமல், மேலும், தீவிர நம்பிக்கையுடன் இறுகிக்கிடந்தது. 'சிறை வாழ்க்கை மண்டேலாவின் மனதை எப்படியும் மாற்றியிருக்கும்; போராட்டத்தைக் கைவிடுவதாக அவர் உறுதியளித்தால், அவரை விடுதலை செய்யலாம்' என்கிற நம்பிக்கையுடன் வெள்ளை அதிகாரிகள் பற்களைக் காட்டியபடி ஒருநாள் மண்டேலாவைச் சந்திக்கச் சிறைக்குள் நுழைந்தனர். ஆனால், அவர்கள் எதிர்பார்த்தது போல், மண்டேலாவின் மன உறுதி ஒரு நூலிழைகூட இளகியிருக்கவில்லை. 'என் இனத்தின் விடுதலையில்தான் என் விடுதலையும். அதில் எந்த மாற்றமும் இல்லை!' என அவர் அழுத்தமாக இருந்தது அவர்களுக்குப் பிரமிப்பை ஏற்படுத்தியது.

ஒரு நாள், சிறையில் தன்னைக் காண யாரோ வந்திருப்பதாக அழைத்துச் செல்லப்பட்ட மண்டேலா, அங்கே கம்பிகளுக்கு அப்பால் தன் வயதான தாயாரைப் பார்த்ததும் மனம் நெகிழ்ந்தார். சற்றுநேரம் எதுவுமே பேசாமல் மௌனமாக நின்ற அவரின் தாய், தளர்ந்த நடையோடு திரும்பிச் செல்ல, நெடுநேரம் மண்டேலா தாய் போன திசையையே வெறித்தவாறு அங்கேயே நின்றிருந்தார். சில நாட்களுக்குப் பின், சிறை அதிகாரிகள் அவரிடம் நீட்டிய ஒரு குறிப்புத் தாளில், அவரது தாயார் இறந்த செய்தி இருந்தது.

காலங்கள் உருண்டன. மண்டேலாவின் வயதும் சரசரவென ஏறிக்கொண்டு இருந்தது. தோல் சுருங்கியது. மனதைப் போலவே அவரது தலைமுடியும் வெளுப்பாக மாறத் துவங்கியது. மாறாதது, அவரது நிமிர்ந்த நடையும் உள்ளத்து உறுதியும் மட்டும்தான்! அதேசமயம், தன் கணவரை விடுவிக்கவும், ஆப்பிரிக்க தேசிய விடுதலைக்காக மக்களைப் போராட்டங்களில் ஈடுபடச் செய்யவும், கணவரின் இடத்தில் இருந்து சுறுசுறுப்பாகச் செயல்பட்டுக் கொண்டு இருந்தார் வின்னி மண்டேலா. இதனால் அவர், வெள்ளை இன வெறி அரசால் பெரும் நெருக்கடிகளைச் சந்திக்கவேண்டி இருந்தது. 1980ல், தந்தையின் முகமே நினைவில் இல்லாத மண்டேலாவின் மூத்த மகள் ஜின்ஜி, ஷார்ப்வில்லி பல்கலைக்கழகத்தில் எண்ணற்ற வெள்ளை மாணவர்கள் மத்தியில், தன் தந்தையின் விடுதலைக்காகப் பேருரை நிகழ்த்தினார். ''பெரும் ரத்த ஆறு இங்கே ஓடாதிருக்கவேண்டுமானால்... வெள்ளை இன அரசே, என் தந்தையை உடனே விடுதலை செய்!'' என அவர் முழக்கமிட்டு, 'அமெண்டா' எனத் தன் தந்தையைப் போலவே வலக் கையை உயர்த்த, ஒட்டுமொத்த வெள்ளை மாணவர்களும் தங்கள் கைகளை உயர்த்தி 'அமெண்டா' எனக் குரலெழுப்பி, அந்த அரங்கத்தையே அதிரவைத்தனர். 1986ம் ஆண்டு, மண்டேலாவின் விடுதலையை முன்வைத்து பெரும் கலவரம் வெடித்தது. ஒட்டுமொத்தமாகத் தென் ஆப்பிரிக்க அரசே உலக நாடுகளால் தனிமைப்படுத்தப்பட்டது.

1989ல் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் காரணமாக, புதிய அதிபராக எஃப்.டபிள்யூ.டி. கிளார்க் பதவி ஏற்றார். உடன், காட்சிகள் மாறத் தொடங்கின. 'அபார்தெய்ட்' இன வெறிச் சட்டம் முழுவதுமாக ஒழிக்கப்பட்டது.

1990 பிப்ரவரி 11ம் நாள். இருபத்தி ஏழு வருடங்களாக துருப்பிடித்து இறுகிக்கிடந்த சிறைக் கதவுகள் அகலமாகத் திறந்தன. ஆயிரக்கணக்கான பத்திரிகையாளர்கள், புகைப்படக் கலைஞர்கள், மற்றும் லட்சக்கணக்கான ஆப்பிரிக்கர்கள் முன் மண்டேலா சுதந்திரக் காற்றைச் சுவாசித்தபடி வெளியே வந்தார். வலக் கையை உயர்த்தி அவர் 'அமெண்டா' என்று குரலெழுப்ப, அதன் விஸ்வரூப எதிரொலி போல் கூட்டத்தின் கோஷம் விண்ணை முட்டியது.

1991ல் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் மண்டேலா. தொடர்ந்து, தனக்கும் வின்னிக்கும் கட்சிக்கும் இடையே ஏற்பட்ட குழப்பங்கள் காரணமாக, வின்னிக்கும் தனக்கும் இடையிலான திருமண முறிவு குறித்து, ஏப்ரல் 13, 1992ல் ஜொஹானஸ்பர்க்கில் நடந்த பத்திரிகையாளர்களின் சந்திப்பில் வெளிப்படையாக அறிவித்தார்.

தனது வாழ்நாளின் நிகரற்ற தியாகத்துக்காக நெல்சன் மண்டேலாவுக்கும் தென் ஆப்பிரிக்காவில் மீண்டும் அமைதி தவழச் செய்தமைக்காக அதன் அதிபரான எஃப்.டபிள்யூ.டி. கிளார்க்குக்கும் 1993ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

1994ல் தனது 75வது வயதில், தென் ஆப்பிரிக்காவின் முதல் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, வரலாற்றைப் பெருமைப்படுத்தினார் மண்டேலா. 1999ல் பதவிக் காலம் முடிந்த பிறகு, மண்டேலா பொது வாழ்விலிருந்து முழுவதுமாக தான் விலகுவதாகக் கூறினாலும், இன்றும் உலகம் முழுக்கப் பரவியிருக்கும் எண்ணற்ற தொண்டு நிறுவனங்களுக்கு கௌரவத் தலைவராகப் பதவி வகித்து வருகிறார்.

ஒரு சாதாரண கிராமத்துச் சிறுவனாகப் பிறந்து, எதிர்பாராதவிதமாக அரண்மனையில் வாழ நேர்ந்து, கல்வியறிவு பெற்று, ஆப்பிரிக்கக் கறுப்பின தேசியத்துக்காகப் போராடி, தனது சமூகத்தை எதிர்த்த வெள்ளை இன மக்களின் சுதந்திரத்துக்காகவும் பாடுபடும் அளவுக்கு அவர் தம்மைச் செம்மைபடுத்திக்கொண்டவிதம் ஒவ்வொரு தனிமனிதருக்குமான சிறந்ததொரு பாடம்.

பல சமயங்களில் நாயகர்கள் வரலாற்றை உருவாக்குகிறார்கள். அரிதான சமயங்களில் மட்டுமே வரலாறு, நாயகர்களை உருவாக்குகிறது.

அப்படி ஓர் அபூர்வ நாயகர்... நெல்சன் மண்டேலா!

Sunday, February 24, 2008

நெல்சன் மண்டேலா-7

தாங்கள் கறுப்பர்களாக இருக்கிறோம் என்பதை
அறிந்துகொள்வதற்காக அவர்கள்
வளர்ந்து ஆளாவதைக் காட்டிலும்
இறப்பது மேல்!

-பென்டன் ஜான்ஸன்

போர்க்களப் பூமியில் ஒவ்வொரு விடியலும் ஒவ்வொரு பாடம்! அலைகடலைச் சிவப்பாக்கி ஆரவாரத்துடன் குளித்தெழும் சூரியனில்தான் எத்தனை சேதிகள்!



விடியலுக்கும் சிவப்புக்குமான இந்தச் சமன்பாட்டை மண்டேலா தெளிவாக உணர்ந்தார். சிவப்பு என்பது நிறமல்ல; சிவப்பு என்பது கட்சியும் அல்ல; அது ஒரு குணம். அடிமைத்தளையைத் தகர்த்தெறியும் போர்க் குணம். அதுதான், அறியாமையின் மடியில் உறங்கிக்கொண்டு இருக்கும் தனது கறுப்பின மக்களுக்கு இன்றைய அடிப்படைத் தேவை என நம்பினார் மண்டேலா. ஆப்பிரிக்கத் தேசிய காங்கிரஸின் பொதுக்கூட்டங்களில் அவரது குரல் உணர்ச்சிகளைத் தட்டி எழுப்பும்விதமாக ஆவேசத்துடன் ஒலித்தது. 'அபார்தெய்ட்' எனும் இன வெறிச் சட்டத்துக்கு எதிராக அவர் எழுப்பிய போர்க் குரலின் விளைவாக 8,000 பேர் அணிதிரண்டனர். இத்தகைய தொடர் போராட்டங்களின் காரணமாக, மண்டேலாவின் புகழ் காட்டுத் தீ போல் ஆப்பிரிக்கர்களின் இதயங்களில் வேகமாகப் பரவப் பரவ, ஆப்பிரிக்க அரசு இந்தப் புதிய தலைவனின் உதயத்தால் பதற்றம் கொள்ளத் தொடங்கியது.



விளைவு, 1952ல் மண்டேலாவுக்கு வந்தது ஓர் அரசாங்க ஓலை. 'நெல்சன் மண்டேலாவாகிய நீங்கள் இனி ஜொஹானஸ்பர்க்கை விட்டு ஒரு அடி நகர்ந்தாலும், கைது செய்யப்படுவீர்கள். பொதுக்கூட்டங்களில் பேசவும் இனி உங்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது. மீறினால் சிறை செல்ல வேண்டி வரும்!' என்று மிரட்டியது அந்த ஓலை.

மண்டேலாவின் அனைத்து நடவடிக்கைகளும் போலீஸாரின் தீவிரக் கண்காணிப்புக்கு உள்ளாயின. உச்சகட்டமாக, 1953ல் தென் ஆப்பிரிக்க அரசு மண்டேலாவை ஆப்பிரிக்கத் தேசிய காங்கிரஸின் பொறுப்புகளிலிருந்து முழுவதுமாக விலக நிர்ப்பந்தித்தது. இத்தகைய தந்திர நெருக்கடிகளின் மூலம் மண்டேலாவை முழுமையாக முடக்கிவிட்டதாக அரசு கற்பனை செய்துகொண்டது. மண்டேலாவும் இதுபோன்ற தருணங்களில் தன்னைப் பாதுகாத்துக்கொள்வது எதிர்காலத்தின் அவசியம் என்பதை உணர்ந்தவராக, கறுப்பு அங்கி அணிந்து சட்டத்தின் மூலமாகக் கறுப்பின மக்களுக்குத் தன்னாலான சேவையைத் தொடர்ந்தார். ஆலிவர் டாம்போ என்னும் சக நண்பருடன் அவர் இணைந்து துவக்கிய அலுவலகத்துக்குத் தினந்தோறும் கறுப்பின மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து, அரசாங்கம் தங்களுக்கு இழைக்கும் அநீதியைச் சொல்லிப் புலம்பினர். ஆப்பிரிக்காவில் பல கறுப்பின வழக்கறிஞர்கள் இருந்தாலும், கறுப்பின மக்களுக்காக வாதாடும் ஒரே அலுவலகமாக அந்த இடம் செயல்பட்டது.

ஒரு முறை, ஜன நெரிசல் மிகுந்த பகுதி ஒன்றில், வெள்ளைக்காரப் பெண்மணி ஒருத்தியின் கார் சிக்கித் தவிப்பதைப் பார்த்தார் மண்டேலா. உடனே ஓடிச் சென்று, அவளது காரை பின்னாலிருந்து தள்ளிக் கொடுத்து, நெரிசலிலிருந்து கார் வெளியே வர உதவினார். அந்த வெள்¬ளைக்காரப் பெண்மணி புன்னகையோடு, ''நன்றி ஜான்!” என்றாள். கறுப்பினச் சகோதரர்களின் பெயர் தெரிந்தாலும் வெள்ளை இனத்தவர்கள் பொதுவாக அவர்களை ஜான் என்றே அழைப்பது வழக்கம். இது ஒருவகை நாகரிக அவமானம். தனது உணர்வுகளை வெளிக்காட்டாமல் அந்த வெள்ளைப் பெண்மணியை நோக்கிப் பதிலுக்குப் புன்னகைத்தார் மண்டேலா. தனக்கு உதவி செய்தது, காலத்தின் மிகச் சிறந்த தலைவன் என்பதை அறியாத அந்தப் பெண்மணி காரில் ஏறிக்கொண்டு, உதவிக்கான அன்பளிப்பாக ஆறு பென்ஸ் நாணயமொன்றை நீட்டினாள். மண்டேலா அவளது சிறுமையைக் கண்டு சிலை போல் நிற்க, அதைத் தனக்கு இழைக்கப்பட்ட அவமானமாக எடுத்துக்கொண்ட அந்தப் பெண்மணி எரிச்சலும் கோபமுமாக, ''ஓஹோ... உனக்கு ஒரு ஷில்லிங் கேட்கிறதோ!” எனச் சீறிவிட்டு, கையிலிருந்த நாணயத்தைச் சாலையில் விசிறியடித்தவளாக விருட்டென்று காரைக் கிளப்பிக்கொண்டு பறந்தாள். அந்தப் பெண் நடந்துகொண்ட விதம், நெல்சனின் மனதில் நெடுநாட்கள் நெருஞ்சி முள்ளாகத் தைத்துக்கொண்டு இருந்தது.

இக் காலகட்டங்களில் மண்டேலாவின் வாழ்வில் சில முக்கிய மாறுதல்களும் நடந்தன. அவரைத் திருமணம் செய்துகொண்டு சிறுபெண்ணாக வாழ்வைச் சந்தோஷத்துடன் துவக்கிய எவ்லினுக்கு, மூன்று குழந்தைகளுக்குத் தாயான பின்பு, கணவனின் அரசியல் நடவடிக்கைகள் மேல் அளவற்ற வெறுப்பு உண்டாக ஆரம்பித்தது. 'என்ன, இந்த மனிதர் கால நேரமே இல்லாமல் எப்போது பார்த்தாலும் அரசியலே கதி என்று இருக்கிறாரே!' எனத் தலையில் கைவைத்துப் புலம்பத் துவங்கினாள். நாளடைவில் அவளின் இந்தப் போக்கு, மண்டேலாவின் மனதிலும் வெறுப்பை ஏற்படுத்தி, விவாகரத்து வரை அழைத்துச் சென்றது. என்றாலும், வெகு சீக்கிரமே அவரை அந்த வேதனையிலிருந்து வெளியே கொண்டுவந்தது, ஓர் அழகிய இள நங்கையின் பார்வை.

'வின்னி மண்டேலா' எனப் பிற்காலத்தில் உலகின் அத்தனை நாளிதழ்களிலும் அச்சாகிய அந்தப் பெண்மணி, இளம் வயதிலேயே அரசியலில் ஆர்வமும் துடிப்பும் துணிச்சலும் மிகுந்தவராகத் திகழ்ந்தார். 1958ல் இருவருக்கும் திருமணம் நடந்தது. ''நான் ஒரு போராளியைத் திருமணம் செய்துகொள்கிறேன் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். எனது இந்தப் புதிய வாழ்க்கைப் பாதையில் வலிகளையும் வேதனைகளையும் எதிர்பார்த்தே அடியெடுத்துவைத்திருக்கிறேன்” என்று தன் கணவரின் தோளில் தலை சாய்த்தபடி, நண்பர்களிடம் கூறினார் வின்னி.

அதன் பிறகு மண்டேலாவின் அரசியல் வாழ்வில் புயல் வேக மாறுதல்கள் நடந்தன. போராட்டத்தின் காரணமாக வழக்குகளும் கைதுகளும் தொடர்கதையாகின. உச்சகட்டமாக, 1960ல் ஷார்ப்வில்லி என்னுமிடத்தில் நடைபெற்ற போராட்டத்தில், ஆப்பிரிக்கக் கறுப்பினத்தவர்கள் 69 பேர் வெள்ளை ராணுவத்தினரின் கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியாகினர். 200க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். இதனைக் கண்டித்து மண்டேலா தனது ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் மூலமாக நாடு தழுவிய போராட்டம் நடத்த முடிவெடுத்தார். இந்தப் போராட்டம் வெற்றிபெற்றால், எங்கே உலக நாடுகள் மத்தியில் போராளிகளுக்கு மதிப்பு கூடிவிடுமோ என்று பயந்த வெள்ளை அரசு உடனடியாக நெல்சன் மண்டேலா, வால்டர் சிசுலு போன்ற முக்கியத் தலைவர்களைக் கைது செய்ய முடிவெடுத்தது. அதுநாள்வரை அஹிம்சைதான் தங்களது பாதை என நம்பி வந்த மண்டேலாவும் மற்ற தலைவர்களும் ஆயுதம் ஏந்துவதுதான் இனி தங்களுக்கான விடியலைத் தேடித் தரும் என்கிற முடிவுக்குத் தள்ளப்பட்டனர்.

உடனடியாகத் தலைமறைவான மண்டேலா உள்ளிட்ட தலைவர்கள் ஒருங்கிணைந்து 'உம்கோட்டா வே சிஸ்வே' என்னும் புதிய குழு ஒன்றை உருவாக்கினர். டிசம்பர் 1961ல் இந்த அமைப்பு தங்களது முதல் குண்டுவெடிப்பை நிகழ்த்த, வெள்ளை அரசு அதிர்ச்சியில் உறைந்தது. அனைத்து செக் போஸ்ட்டுகளும் உஷார் செய்யப்பட்டன. மண்டேலாவின் உருவம் தாங்கிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டு, அவரைப் பற்றிய தகவலோ அல்லது உயிருடனோ பிடித்துத் தருபவர்களுக்கு உயர்ந்த சன்மானம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்பே மண்டேலா தங்களது விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவு திரட்ட வெளிநாடுகளுக்குப் பயணமாகிவிட்டார்.

சூடான், கானா, எகிப்து, அல்ஜீரியா, லண்டன் மற்றும் இதர ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, உலகத் தலைவர்களைச் சந்தித்து தங்களது மக்கள் படும் துயரங்களை உலகறியச் செய்தார். தென் ஆப்பிரிக்க அரசின் இந்த அராஜகப் போக்கை வன்மையாகக் கண்டித்தது ஐ.நா.சபை.

வெற்றிப் புன்னகையுடன் நாடு திரும்பிய மண்டேலாவின் கார் ரகசியமாக ஜொஹானஸ்பர்க் நகரினுள் நுழைந்தது. நண்பர் வால்டர் சிசுலுவுடன் அடுத்த கட்ட போராட்டத்தை எப்படி, எப்போது துவக்கலாம் என விவாதித்தபடி காரில் பயணித்துக்கொண்டு இருந்த மண்டேலாவின் நினைவெல்லாம் கடந்த ஒரு வருடமாகப் பிரிந்திருந்த மனைவி வின்னி மற்றும் அவள் மூலம் பிறந்த பெண் குழந்தைகளான ஜின்ஜி, ஜெனானி ஆகியோரின் மீதே குவிந்திருந்தது.

எதிர்பாராத ஒரு கணத்தில், திடீரென அவர்களது வாகனம் வழிமறிக்கப்பட்டது. ஆயுதம் ஏந்திய ராணுவத்தினர் அவர்களைச் சுற்றி வளைத்தனர். நீண்ட நெடிய சிறைவாசம் தன் மீது கவியப்போவதை அறியாமல், தன் நண்பருடன் காரிலிருந்து இறங்கினார் மண்டேலா!

நெல்சன் மண்டேலா-6

ஒருவர் விடாமல் எல்லோரும் வாருங்கள்
சாத்தானையும் அவனது சீடர் குழாமையும்
விரட்டி விரட்டி நாம் அடித்துத் துரத்தும்
கண்கொள்ளாக் காட்சியைக் காண
ஒருவர் விடாமல் எல்லோரும் வாருங்கள்!

- கூகி வா தியாங்கோ



நெல்சன் மண்டேலா எவ்லின் எனும் இரு இதயங்களின் திருமணம், எளிமைக்கான அழகுடன், 1944ல் நடந்தேறியது. வழக்கமாகத் திருமணங்கள் முடிந்த பின் நடைபெறும் சிறு விருந்துக்குக்கூட வழியில்லாத நிலையில், மண்டேலா நம்பிக்கையுடன் தன் இளம் மனைவியின் கரத்தை இறுகப் பற்றினார். அன்று இரவே, ஜொஹானஸ்பர்க் எனும் பிரமாண்ட நகரத்தின் அழுக்கு போர்த்திய வீதியில், வெளிச்சம் குறைந்த சிறிய வீடொன்றில் இருவரும் இல்லறம் நடத்தக் குடிபுகுந்தனர். நெல்சன் சட்டம் படித்துக்கொண்டு இருக்க, செவிலிப் பெண்ணாகப் பணிபுரிந்த எவ்லினின் சிறு சம்பளத்தில் குடும்பச் சக்கரம் ஓடியது. அடுத்த வருடத்திலேயே, வீட்டில் மழலைச் சத்தம் கேட்டது. மூக்கும் முழியுமாக, அசப்பில் நெல்சனைப் போலவே இருந்த அந்த ஆண் மகவுக்குத் 'தெம்பி' என்று பெயர் சூட்டினர்.



பிறக்கும்போது எல்லா மனிதர்களுமே மிருக இனமாகத்தான் பிறக்கிறார்கள். அனுபவங்கள்தான் அவர்களிடம் இருக்கும் அறியாமைகளைப் படிப்படியாகப் போக்கி, பக்குவமுள்ள மனிதர்களாக மாற்றுகிறது. ஆனால், மகத்தான மனிதர்கள், தாங்கள் மாறியதோடு மட்டுமல்லாமல், ஒரு சமூகத்தையே மாற்றி, தலைமுறைகளுக்கே வழிகாட்டும் பிரமாண்ட விளக்காகப் பிரகாசித்தபடி உயர்ந்து நிற்கிறார்கள். துவக்க காலங்களில் நெல்சனின் மனதையும் ஒரு மாய இருட்டு திரை போட்டு மூடியிருந்தது. தனது சோஸா இனத்தின் மீது மட்டுமே பற்றுக் கொண்டவராக இருந்த நெல்சன், ஜொஹானஸ்பர்க் நகரத்துக்கு வந்த பின், பிற கறுப்பினத்தவர்கள் படும் அல்லல்களைப் பார்த்து உள்ளம் குமுறினார். அதுவரை அவருக்குள் சோஸா இனம் மட்டுமே இருந்தது போய், ஆப்பிரிக்கா எனும் கண்டமும் அதன் மக்களும் அவரது இதயத்தை வியாபித்தனர். இதனாலேயே ஆப்பிரிக்காவில் வசித்த இந்தியர்கள் மீது அவருக்குசின்ன வெறுப்பு உண்டானது.'இந்தியர் களுக்காவது இந்தியா என்றொரு நாடு இருக்கிறது. எமது கறுப்பின மக்கள் சொந்த மண்ணிலேயே சொல்லிக்கொள்ள ஒரு நாடு இல்லாமல் அநாதைகளாகத் திரிகின்றார்களே!' என்று எண்ணிய அவர், 'ஆப்பிரிக்கா, ஆப்பிரிக்கர்களுக்கே!' என முழங்கினார். ஆனால், அவரது இந்த எண்ணம் 1946ம் ஆண்டு அடியோடு மாறியது. அதற்குக் காரணம், இந்தியர்கள் அப்போது நடத்திய காந்திய வழியிலான உரிமைப் போராட்டம்.



தென்னாப்பிரிக்காவில் கறுப்பினத்தவர்களுக்கு அடுத்தபடியாக இந்தியர்களே அதிகம் வசித்து வந்தனர். வெள்ளை அரசு தனது இனவெறியைப் பாரபட்சமில்லாமல் இந்தியர்கள் மீதும் செலுத்தி வந்தது. இதை எதிர்த்து காந்தியடிகள் நடத்திய தீவிர போராட்டத்தின் விளைவாக, அவர் இந்தியா சென்ற பின்னரும்கூட, ஆப்பிரிக்காவில் இருந்த இந்தியர்கள் எழுச்சிமிக்க வர்களாக ஒரு வலுவான எதிர்ப்பை வெள்ளை அரசுக்கு எதிராக வெளிப்படுத்தி வந்தனர். இந்தியர்களின் போராட்டத்தில் கட்டுக்கோப்பும் தீவிரமும் இருந்த காரணத்தால், அவர்களை முழு மையாக அடக்கி ஒடுக்க, புதிய சட்டம் ஒன்றை அறிவித்தது வெள்ளை அரசு. அதன்படி, இந்தியர்களின் சுதந்திர நடமாட் டங்கள் கட்டுப்படுத்தப்பட்டன. கூட்டங்கள், ஒலிபெருக்கி ஊர் வலங்கள் தடைசெய்யப்பட்டன. இந்தியர்களின் வணிகம் முழுவதுமாக முடக்கப்பட்டது. இந்தியர் களிடம் நிலங்களை விற்பதும் வாங்குவதும் குற்றம் என அறி விக்கப்பட்டது. இந்த அநீதியைக் கண்டித்து இந்தியர்கள் வெகுண் டெழுந்தனர். போராட்டம் வெடித்தது.

மருத்துவர்கள், வழக்குரைஞர்கள், வணிகர்கள், தொழிலாளர்கள், மாணவர்கள், வீட்டுப் பெண்கள் என அனைவரும்இந்த இரண்டு வருடப் போராட்டத்தில் முன்னணி வகித்தனர். தடையை மீறி ஊர்வலங்கள் நடத்தப் பட்டன. ஏறக்குறைய 2,000 பேர் சிறைப் பிடிக்கப்பட்டனர். பலரது வேலைகள் பறிபோயின. இஸ் மாயில் மீர், ஜே.என்.சிங் போன்ற மாணவர்களின் ஈடுபாடும்,தியாக மும், அஞ்சாமையும், தென்னாப்பிரிக்கக் கறுப்பின மக்களிடையே உனர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஒருங்கே தட்டி எழுப்பின. அது வரை இந்தியர்கள் மீது ஒருவித வெறுப்பு உணர்வுகொண்டு இருந்த நெல்சனின் நெஞ்சில் இது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. 'இந்தியர்களிடம் இருக்கும் எழுச்சியும் போராட்ட உணர்வும் நம் மக்களிடம் ஏன் இல்லை? அவர்களின் தியாகமும் வீரமும் ஏன் நம் மக்களிடம் இல்லை?' என நெல்சனின் உள்ளத்தில் எண்ணற்ற கேள்வி கள்.

தென்னாப்பிரிக்காவில் காந்தி 1913ல் நடத்திய போராட்டங்களைப் பற்றிக் கேள்விப்பட்டார் மண்டேலா. அதுவரை ஒரு தகவலாக மட்டுமே இருந்த மகாத்மாவும் அவரது கொள்கைகளும், மண்டேலாவின் சிந்தனைகளில் பெரும் மாறுதல்க¬ளை ஏற்படுத்தின. இக்கால கட்டங்களில் இந்தியாவில் காந்தி மேற்கொண்ட போராட்டங்களும், அதைத் தொடர்ந்து இந்தியா பெற்ற விடுதலையும் மண்டேலாவின் சிந்தனைகளை வலுப்பெறச் செய்தன. காந்திஜியின் அணுகுமுறைகள் எப்படி இந்திய மக்களை ஒன்றிணைத்து, விடுதலைப் போராட்டத்தைத் தீவிரப்படுத்தி, சுதந்திரத்தைப் பெற்றுத் தந்ததோ, அதே போல ஆப்பிரிக்கக் கறுப்பின மக்களை ஒன்று திரட்டி, எழுச்சியோடு போராட, தன்னலமற்ற தலைமை ஒன்று தேவை என்பதை உணர்ந்தார்.

அதே சமயம், கம்யூனிஸ்ட்டுகளிடம் அவருக்கு இருந்த தேவையற்ற பயமும் மெள்ள விலக ஆரம்பித்தது. ஜே.பி.மார்க்ஸ், டான் டிலோமி போன்ற தோழர்களின் நட்பு காரணமாக கார்ல் மார்க்ஸையும் ஏங்கல்ஸையும் படிக்கத் துவங்கினார். கம்யூனிஸ்ட் அறிக்கையும் தாஸ் கேப்பிட்டலும் அவருக்குள் அறிவு வெளிச்சத்தை ஏற்றின. மகத்தான தியாகங்களும் வற்றாத போராட்ட உணர்வும் மட்டுமே ஆப்பிரிக்காவின் அடிமை விலங்கை உடைத்தெறியும் என்னும் அழுத்தமான எண்ணம் அவருக்குள் பதிந்தது. தனது மக்களின் உணர்ச்சி களைத் தட்டி எழுப்பச் சரியான சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி அவர் காத்திருந்தார். இந்தத் தருணத்தில்தான், ஒரு கொடிய வைரஸ் தென் ஆப்பிரிக்காவுக்கு வெள்ளையர் களால் இறக்குமதி செய்யப்பட்டது. அதன் பெயர் 'அபார்தெய்ட்'. வெள்ளையர்கள் தங்களது இனவெறி இம்சைகளுக்கு சட்டபூர்வமாகச் சூட்டிய புதிய பெயர் அது.

இரண்டாம் உலகப் போரின்போது, ஹிட்லரின் வளர்ச்சி கண்டு பயந்த பிரிட்டிஷ் அரசு, தனது ஏகாதிபத்தியம் நடைபெற்ற குடியேற்ற நாடுகளில் இருந்த மக்களிடம், போரில் தன்னை ஆதரிக்கும்படி குழைந்து வேண்டிக் கேட்டுக்கொண்டு இருந்தது. ஒருவழியாகப் போர் முடிந்து, ஹிட்லரைத் தோற்கடித்து, ஒரு மகத்தான வெற்றியைப் பெற்ற பின்பு, மீண்டும் தன் அதிகாரத்தைத் திணிக்கும் பொருட்டு, அப்போது புதிதாகப் பதவி ஏற்றிருந்த டாக்டர் மாலன் என்பவரின் அரசால் கொண்டுவரப்பட்டதுதான் இந்தக் கொடூர அபார்தெய்ட் சட்டம்.

இதன்படி ஒவ்வொரு ஆப்பிரிக்கனும் இனவாரியாகக் கணக்கெடுக்கப்பட்டனர். கறுப்பினத்தவர்கள், இந்தியர்கள், சீனர்கள், இதர ஐரோப்பியர்கள் எனத் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டனர். கலப்பினத்துக்குப் பிறந்தவர்களாக இருந்தால், அவர்களின் தலைமுடிகளின் சுருள்தன்மை அளவெடுக்கப்பட்டு, அவர்கள் கறுப்பினத்தவரா இல்லையா என்பது தீர்மானிக்கப்பட்டது. இதனால் கலப்புத் திருமணங் கள் மூலமாக ஒரே வீட்டின் ரத்த உறவுகளாக இருக்கும் அப்பா, அம்மா, அண்ணன், தங்கை, மகன், மகள் போன்ற உறவுகள்கூட இனவாரியாகப் பிரிக்கப்பட்டனர். குழந்தைகளே ஆனாலும் ஈவிரக்கமின்றி தாயிடமிருந்து பிரிக்கப்பட்டன. வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் காதலிப்பது, திருமணம் செய்துகொள் வது போன்றவை தண்டனைக்குரிய குற்றங்களாக அறிவிக்கப்பட்டன. அதே போல, குறிப்பிட்ட இனத்தவர் வசிக்கும் பகுதிகளில் அந்த இனத்தவர் மட்டுமே கடை நடத்தவோ, தொழில் செய்யவோ அனுமதிக்கப்பட்டனர். இந்தக் கெடுபிடிகளால் கிட்டத்தட்ட மூன்றரை மில்லியன் மக்கள் தங்களது வீடு, வாசல், சொத்து, சுகம் என அனைத்தையும் இழந்து, வலுக்கட்டாயமாகக் குடிபெயர்க்கப்பட்டனர். மறுத்தவர்களையும் எதிர்த்தவர்களையும் ராணுவத்தினர் தங்கள் துப்பாக்கியின் பின்புறத்தால் இடித்து, முகவாயைப் பெயர்த்தனர். நூலகங் கள், திரையரங்குகள், பூங்காக்கள் இங்கெல்லாம் வெள்ளையர் அல்லாதவர்கள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. மண்ணின் மக்களான கறுப்பின மக்களே இதனால் பெரிதும் பாதிப்புக்கு ஆளாயினர். பேருந்து, ரயில், கல்விக்கூடங்கள் என அனைத்திலும் கறுப்பினத்தவர்களுக்கென தனி இடம்ஒதுக்கப் பட்டது. அவர்களுக்குப் பிரத்யேக அடையாள அட்டைகள் கொடுக்கப்பட்டு, அதனை எப்போதும் அணிந்திருக்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டு, கால்நடைகளைவிட மோசமாக நடத்தப்பட்டனர்.

உலகம் அதுவரை காணாத இந்தப் பெரும் அவலத்தை, ஒன்று சேர்ந்து எதிர்ப்பதென, ஆப்பிரிக்க தேசிய காங்கிரசும், கம்யூனிஸ்ட்டுகளும், தென்னாப்பிரிக்க இந்திய அமைப்புகளும் முடிவு செய்தன.

ஜூன் 26, 1950. அன்று அந்தப் போராட்டத்தை வழிநடத்திச் செல்ல, அனைவருக்கும் பொதுவான ஒரு தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர், நெல்சன் மண்டேலா!

நெல்சன் மண்டேலா-5

நாம் எல்லோரும்
ஒரே தொப்புள் கொடியிலிருந்தே வந்தோம்.
எனினும்,
நம் அசிங்கமான தலைகளை
எங்கிருந்து பெற்றோம் என்று
யாருக்குத் தெரியும்?

-ட்சிக்காயா யூ தாம்சி

அண்ணனின் காதலி தனக்கு மனைவியாவதா?

நெல்சனுக்கு மனம், உடல், வாழ்க்கை அனைத்தும் கசந்துபோனது. ஆனாலும், மன்னரின் கட்டளையை அத்தனை சுலபமாக மறுக்கவும் முடியாது. தவிரவும், தனது இந்த வாழ்க்கையே அவர் போட்ட யாசகம்!



கொடும் கனவினூடே பாதியில் விழித்துக்கொண்ட சிறுவனாக மண்டேலா பெரும் குழப்பத்தில் திகைத்து நிற்க, இந்தச் சிக்கலிலிருந்து மீள தான் ஒரு திட்டம் வைத்திருப்பதாகச் சொன்னான் ஜஸ்டிஸ். அதன்படி, தெம்பு அரசப் பிரதிநிதிகளின் கூட்டத்தில் கலந்துகொள்ள ஏழு நாள் பயணமாக மன்னர் காரில் வெளியூருக்குப் பயணமான அன்று இரவு, யாருக்கும் தெரியாமல் ஜஸ்டிசும் மண்டேலாவும் கறுப்பர்களுக்கான பிரத்யேக ரயிலில் ஜொஹானஸ்பர்க் நோக்கிப் போய்க்கொண்டு இருந்தனர். ஒரு சாதாரண கறுப் பின இளைஞனை உலகின் அதி மனிதனாகமாற்றப் போகும் உற்சாகத்தோடு தடதடத்தபடி விரைந்து கொண்டு இருந்தது ரயில்.

ஜொஹானஸ்பர்க்கின் பரபரப்பு நெல்சனை மலைக்கவைத்தது. கறுப்பும் வெள்ளையுமாக எங்கு பார்த்தாலும் மக்கள்... மக்கள்..! சாலைகளில் சீறிச் செல்லும் மோட்டார் கார்கள், பள்ளி செல்லும் குழந்தைகள், நடைபாதை வியாபாரிகள், உயர உயரமான கட்டடங்கள், பிரமாண்ட தொழிற்சாலைகள்..! கறுப்பர், வெள்ளையர் தவிர, மூன்றாவதாக ஒரு நிறத்தவரையும் நெல்சன் அங்கே அதிகமாகப் பார்த்தார். அவர்கள் இந்தியர்கள் என்றும், வெகு காலத்துக்கு முன்பே பிரிட்டிஷாரால் கொத்தடிமைகாளாக இங்கு கொண்டுவரப்பட்டு, பின்பு நிரந்தரமாக இங்கே தங்கிவிட்டவர்கள் என்றும் பிற்பாடு நெல்சன் தெரிந்துகொண்டார்.

தேடி வந்தது போலவே நெல்சன், ஜஸ்டிஸ் இருவருக்கும் ஜொஹானஸ்பர்க் தங்கச் சுரங்கத்தில் வேலை கிடைத்தது. ஜஸ்டிசுக்கு எழுத்து வேலை; நெல்சனுக்குக் காவல் பணி! புதிய நகரம், புதிய வாழ்க்கை! எல்லாம் சில நாட்கள்தான். இருவரையும் சல்லடை போட்டுத் தேடி வந்த மன்னர் ஜோன்ஜின்டேபாவுக்கு, இவர்கள் ஜொஹானஸ்பர்க்கில் இருப்பது தெரிய வர, அடுத்த சில மணி நேரத்தில் சுரங்கத்திலிருந்து இருவரும் மூட்டை முடிச்சுகளுடன் வெளியே வந்து விழுந்தனர். ஜஸ்டிஸ் வேறு வழியின்றி ஊர் திரும்ப, நெல்சன் மட்டும் அந்தப் பெரு நகரச் சாலையில் தன்னந்தனியராக நின்றுகொண்டு இருந்தார். எதிர்காலம் மிகப் பெரிய கேள்விக்குறியாக அவர் முன் நின்று பயமுறுத்தியது. சட்டென மின்னலாக ஒரு ஞாபகம். பாக்கெட்டைத் துழாவி, கசங்கிய காகிதம் ஒன்றை எடுத்தார். அவரின் தூரத்து உறவினரின் முகவரி அது. உள்ளுக்குள் இனம் புரியாத உற்சாகம் பரவ, அந்த விநாடியிலிருந்து அவர் முன் விரிந்தது அரசியல் பாதை. தான் ஓடுவது ஒரு சிவப்புக் கம்பளத்தின் மேல் எனத் தெரியாதவராக, நெல்சன் அந்த உறவினரின் வீட்டைத் தேடி ஓடினார்.

கார்லிக் பேகேனி... உறவினன் என்று சொல்லிக்கொண்டு வந்தி ருக்கும் அந்தக் கிராமத்து இளை ஞனை மேலும் கீழும் பார்த்தார். 'பார்வைக்கு நல்ல பையனாகத்தான் தெரிகிறான். இவனுக்கு ஏதாவது செய்ய வேண்டும்' எனத் தோன்ற, அன்போடு வீட்டுக்குள் அழைத்தார். உணவளித்தார். சில நாட்களுக்குப் பிறகு, ''தயாராக இரு! நாளை உன்னை ஒரு முக்கியமான நபரிடம் அழைத்துச் செல்லப்போகிறேன்'' என்றார். நெல்சனின் அன்றைய இரவு தவிப்புடன் கழிந்தது. அடுத்த நாள் காலையில் உதித்த சூரியனில் நெல்சன் மண்டேலா என எழுதியிருந்திருக்குமோ..! இல்லாவிட்டால், அவரது எதிர்காலத்தைத் தீர்மானித்த 'வால்டர் சிசுலு' என்னும் ஓர் அற்புத வழிகாட்டியை அவர் சந்தித்திருக்க முடியாது.



வால்டர் சிசுலு, ஜொஹானஸ்பர்க்கின் பரபரப்பான மனிதர்; ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர். அவரது அறிமுகத்தின் வாயிலாக நெல்சனுக்கு ஒரு யூத நிறுவனத்தில் வேலை கிடைத்தது. சமயம் கிடைக்கும்போதெல்லாம் சிசுலுவின் அலுவலகத்துக்குச் செல்வார் நெல்சன். அங்கே சிசுலுவைப் பார்க்க எண்ணற்ற நண்பர்கள் கூடுவர். அரசியல் விவாதங்கள் சூடு பறக்கும். அவை நெல்சனின் மண்டைக்குள் நெருப்பை மூட்டின. அவர்களுடன் தானும் கலந்து தீவிரமான அரசியலில் பங்கேற்க வேண்டுமானால், அதற்குப் படிப்பு அவசியம் என்பதை உணர்ந்த நெல்சன், வேலை செய்துகொண்டே சட்டம் படிக்கத் துவங்கினார்.

காலம் வேடிக்கையானது. துவக்கத்தில் மண்டேலாவை தனது பிரமாண்டத்தால் ஆச்சர்யப்படுத்திய அதே ஜொஹானஸ்பர்க் நகரம், இரண்டே வருடத்தில் அவரை மிகவும் வெறுக்கவைத்தது. காரணம், அங்கு தலைவிரித்தாடும் நிறவெறி. கோட் சூட் அணிந்து ஆங்கிலத்தில் பேசித் திரிந்த தமது கறுப்பினச் சகோதரர்களைப் பார்த்துத் துவக்கத்தில் அகமகிழ்ந்தவர், இப்போது அவர்களைப் பார்த்து மிகவும் வேதனைப்பட்டார். காரணம், அந்த டிப்டாப் தோற்றம் வெறும் வெளிப்பூச்சு! உண்மையில், அவர்கள் வெள்ளையர்களின் அலுவலகங்களில் நாய்களை விடக் கேவலமாக நடத்தப்பட்டனர். நிறத்தின் காரணமாக ஒவ்வொரு அலுவலகத்திலும் ஒவ்வொரு நிமிடமும் கறுப்பினத்தவர் அவமானப்படுத்தப்பட்டனர். பேருந்துகளிலும், அங்காடிகளிலும், இதர பொது இடங்களிலும் அவர்கள் வெள்ளையர்களால் தனிமைப்படுத்தப்பட்டனர். வெள்ளை இனத்தவர்கள் வசிக்கும் வீடுகளும் வீதிகளும் அனைத்து வசதிகளுடன் இருந்தன. ஆனால், மண்ணின் மைந்தர்களான ஆப்பிரிக்க மக்களோ, கழிப்பிட வசதிகூட இல்லாதஅசுத் தமான குடியிருப்புகளில் ஒதுக்கப் பட்டனர். இந்த இனப் பாகுபாடு, இயல்பிலேயே தன்மான உணர்ச்சி மிகுந்த நெல்சனுக்குள் பெரும் நிம் மதியின்மையைத் தோற்றுவித்தது. இதனிடையில், வால்டர் சிசுலுவின் அழைப்பின் பேரில் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார் நெல்சன்.

கட்சியில் சேர்ந்த பின்னர், சில விஷயங்கள் அவருக்குத் தெளிவாகத் தெரிந்தன. அந்தக் கட்சியினரின் நடவடிக்கைகளால் ஆப்பிரிக்கக் கறுப்பினத்தவர்களுக்கு எந்த லாபமும் இல்லை என்பதை வெகு சீக்கிரமே புரிந்துகொண்டார் நெல்சன். மேலும், அந்தக் கட்சியில் பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்க்கும் வெள்ளை இனத்தவர்களே அதிக அளவில் பொறுப்பில் இருந்தனர். அதனாலேயே அவர்களின் நடவடிக்கைகளில் உணர்ச்சி இல்லை. மேலும், குடியேற்ற இந்தியர்களும் அதிக அளவில் அந்தக் கட்சியில் இருந்தனர். 'இந்தியர்களுக்காவது இந்தியா என்றொரு நாடு இருக்கிறது. ஆனால், எமது ஆப்பிரிக்கக் கறுப்பின மக்களுக்கென நாடே இல்லை. எனவே, அனைத்துக் கறுப்பினத்தவர்களையும் ஒன்று சேர்த்து, முழுவதும் கறுப்பர்களாலான ஒரு தேசியத்தைக் கட்டியமைக்க வேண்டும்' என்பது நெல்சனுக்குள் ஒரு கனவாக எழுந்தது. இதனை சிசுலுவிடம் பகிர்ந்துகொண்டார். இது போலவே கவுர் ரெடெபே, ஜோ ஸ்லோவா போன்ற ஒருமித்த கருத்துடைய இளைஞர்கள் ஒன்று சேர, 1944ல் ஒரு ஈஸ்டர் தினத்தன்று ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் இளைஞர் குழு என்னும் புதிய அமைப்பு, வில்லியம் கோமோ என்பவரின் தலைமையில் உதயமானது. 'ஆப்பிரிக்கா ஆப்பிரிக்கர்களுக்கே!' இதுதான் அவர்களது கட்சியின் ஒருமித்த குரலாக ஒலித்தது. தீர்மானக் குழுவில் நெல்சனுக்கு முக்கியப் பொறுப்பு கொடுக்கப்பட்டது.

ஒரு நாள் மாலை, வழக்கம் போல சிசுலுவின் வீட்டுக்கு அரசியல் நண்பர்களுடன் அனல் பறக்கும் விவாதத்தில் ஈடுபட்டு இருந்த மண்டேலாவுக்கு உள்ளம் துள்ளியது. காரணம், எவ்லின்! அவள் அங்கு தேநீர் உபசரித்துக்கொண்டு இருந்த ஒரு கிராமத்துப் பெண். தாய், தந்தை இல்லாத அநாதைப் பெண் ணான அவள், மருத்துவமனையில் செவிலிப் பெண்ணாக வேலை செய்து வருகிறாள் என சிசுலுவின் மூலம் தெரிந்துகொண்டார் மண்டேலா.

அன்று இரவு, படுக்கையில் படுத்திருந்த மண்டேலாவின் உதடுகள் 'எவ்லின்... எவ்லின்...' எனத் திரும்பத் திரும்பச் சொல்லிப் பார்த்துக்கொண்டன.

நெல்சன் மண்டேலா-4

இரவு அழகானது
எம் மக்களின் முகங்களும்
நட்சத்திரங்களும் அழகானவை
எம் மக்களின் கண்களும்
சூரியனும் அழகானவன்
எம் மக்களின் ஆத்மாக்களும்!

- லாங்ஸ்டன் ஹ்யூஸ்

வாலிபத்தில் நெல்சனின் புன்னகை, அவர் படித்துக்கொண்டு இருந்த க்ளார்க் பரி பள்ளியில் பிரசித்தம். மழைக்காலத்தில் இலைகளின் மீது படிந்திருக்கும் நீர் முத்துக்களைப் போல, அவரது கண்கள் தெள்ளியதாகவும் குளிர்ச்சியானதாகவும், அங்கிருந்த சக மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவரையும் வசீகரித்தன. அங்குதான் அவரது மனதுக்குள் புதிய புதிய உலகங்கள் விரியத் துவங்கின.

வெள்ளை இனத்தவரைப் பார்த்ததுமே, நாம் அடங்கிப்போக வேண்டும் என்கிற தாழ்வு மனப்பான்மை இயல்பாகவே எல்லா கறுப்பினத்தவருக்குள்ளும் இருப்பது போல, மண்டேலாவுக்கும் இருந்தது. அது, அந்தப் பள்ளியின் கறுப்பின ஆசிரியரான மா(ஹ்)லாசேலாவைப் பார்க்கும் வரைதான்!



வெள்ளைத் தலைமை ஆசிரியருக்குத் தலைவணங்காத அவரது கம்பீரமான நிமிர்ந்த நடையும் தன்னம்பிக்கை மிளிரும் முகமும், மண்டேலாவின் மனதில் ஒருவித சிலிர்ப்பை ஏற்படுத்தியது. அதன்பின், ஒவ்வொரு வெள்ளையரைப் பார்க்கும்போதும் மண்டேலாவின் மனதில் ஆசிரியர் மா(ஹ்)லாசேலாவின் முகம் தோன்ற, அடுத்த விநாடியே இவரது உடலிலும் ஒரு திமிர் பிறக்கும். தலை தானாக நிமிரும்.

மனிதருக்கு மனிதர் சமம். நிறங்களால் எவரும் மேன்மையானவரும் இல்லை; அடிமையானவரும் இல்லை. மண்டேலாவின் அடி மனதில் அழுத்தமாகப் பதிந்த இந்த உணர்வே, அது தொடர்பான அடுத்தடுத்த சிந்தனைகளுக்கும் எதிர்கால அரசியலுக்கும் வித்தாக அமைந்தது.

க்ளார்க் பரியில் பி.ஏ., படிப்பு முடிந்ததும், மேல்படிப்புக்காக ஹீல்டு டவுன் கல்லூரி அவரை வரவேற்கக் காத்திருந்தது. ஆண்களும் பெண்களுமாக கிட்டத்தட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்த அந்தக் கல்லூரிதான் ஆப்பிரிக்காவின் மிகப் பெரிய கல்லூரி. வழக்கம் போல தனது தனித்த தோற்றத்தாலும் தலைமைப் பண்பு மிக்க நடவடிக்கைகளாலும், ஹீல்டு டவுன் கல்லூரியிலும் கதாநாயகனாகப் பிரகாசித்தார் மண்டேலா.

மூன்றாம் ஆண்டின் இறுதி நாளையட்டி, ஒரு விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தது கல்லூரி. விழாவின் சிறப்பு விருந்தினராக கறுப்பினக் கவிஞர் மெக்காயி வருவதாகக் கேள்விப்பட்டதிலிருந்து, மாணவர்கள் மத்தியில் உணர்ச்சி அலைகள் கொந்தளிக்க ஆரம்பித்தன. விழா நாளன்று, மைதானத்தில் மாணவர்கள் ஆவலோடு பெரும் திரளாகக் கூடியிருந்தனர். சட்டென வாசலில் பரபரப்பு. கல்லூரியின் வெள்ளை இன அதிகாரிகளும், ஆசிரியர்களும் எழுந்து நிற்க, புலித் தோல் அணிந்தபடி மெக்காயி, சிவப்புக் கம்பள விரிப்பில் ஒரு சிங்கத்தைப் போல நடந்து வந்தார். வெள்ளையர்கள் நடத்தும் ஒரு கல்லூரியில், வெள்ளையர்களே மரியாதையாக எழுந்து நிற்க, ஒரு கறுப்பு இனத்தவர் நடந்து வருவதைக்கண்ட மண்டேலாவின் உள்ளம் பெரும் களிப்பில் மிதந்தது.



அரங்கம் அமைதியில் உறைய, அனைவரின் காதுகளும் மெக்காயியின் உரைக்காக ஆவலுடன் காத்திருந்தன.

தன் கையில் பிடித்திருந்த குத்தீட்டியை உயர்த்தியவாறு பேசத் துவங்கினார் மெக்காயி. யாரும் எதிர்பாராதவிதமாக சட்டென அந்தக் குத்தீட்டி, அவரது தலைக்கு மேல் சென்றுகொண்டு இருந்த மின்கம்பியை உரச, தீப்பொறிகள் பறந்தன. அனைவரும் திடுக்கிட்டனர். ஒரு நிமிடம் அதிர்ச்சியுடன் அந்தக் கம்பியையே பார்த்துக்கொண்டு இருந்த மெக்காயி, பின்பு மாணவர்களிடம் திரும்பி, ''தோழர்களே! இதை வெறுமே குத்தீட்டிக்கும் மின் கம்பிக்கும் இடையில் நடந்த மோதலாக நான் கருதவில்லை. ஆன்ம சக்தி நிரம்பிய நம் ஆப்பிரிக்க மரபுக்கும் உயிரோட்டமே இல்லாத மேற்கத்திய நாகரிகத்துக்கும் நடக்கும் இன்றைய கலாசார மோதலாகவே காண்கிறேன். சுருக்கமாகச் சொன்னால், நன்மைக்கும் தீமைக்கும் நடக்கும் போராக இதைக் கருதுகிறேன்'' என்று பேசத் துவங்க, மாணவர்களிடையே கைதட்டல்கள் அதிர்ந்தன. அங்கே அமர்ந்திருந்த வெள்ளை இனத்தவர்களின் முகங்களில் அதிர்ச்சி!

மெக்காயி மேலும் ஆவேசத்துடன் தன் கைகளை வானுக்கு உயர்த்தி, கவிதை வாசிக்கத் துவங்கினார். ''உலகப் பேரினங்களே, வாருங்கள்! என் முன் விரிந்துகிடக்கும் அண்ட சராசரங்களை உங்களுக்காகப் பங்கிடுகிறேன். ஐரோப்பாவின் பிரெஞ்சு, ஜெர்மானிய, ஆங்கில தேசங்களே... முதலில் உங்களுக்காக, உங்களின் கர்வத்துக்கும் தற்பெருமைக்கும் இணையாக அந்த பால் வழிமண்டலங்களைப் பரிசாகத் தருகிறேன். எடுத்துச் செல்லுங்கள்! அடுத்ததாக... ஆசிய, அமெரிக்க தேசங்களே! நீங்கள் மீதம் இருக்கும் நட்சத்திரங்களையெல்லாம் எடுத்துச் செல்லுங்கள். கடைசியாக, என் ஆப்பிரிக்க சோஸா கறுப்பின மக்களே! உங்களுக்காக நான் மீதம் வைத்திருப்பதெல்லாம் ஒரே ஒரு நட்சத்திரம்தான்! அது கிழக்கிலே தினமும் முதலில் உதிக்கும் வெள்ளி நட்சத்திரம். எந்தக் காலத்திலும் அது உங்களுக்குள் போராட்ட உணர்வை வற்றாமல் மீண்டும் மீண்டும் ஊற்றெடுக்கவைக்கும்'' என்ற அர்த்தம் பொதிந்த பாடலை, மெக்காயி கைகளை விரித்தபடி அங்குமிங்கும் நடமாடிக்கொண்டே பாடி முடித்ததும், மாணவர்கள் உணர்ச்சிக் கொந்தளிப்புடன் ஆரவாரித்தனர்.



மண்டேலாவின் உள்ளத்தில் அந்தப் பாடல் வரிகள், பெரும் வெடிப்புகளை ஏற்படுத்தின. உண்மையில் அவருக்குத் தானும் சோஸா இனத்தைச் சேர்ந்தவன் என்பதில் பெருமையும் சந்தோஷமும் இருந்தாலும், கேள்விகள் பல எழுந்தன. 'ஆப்பிரிக்காவில் சோஸா இனம் தவிர, பல்வேறு கறுப்பினக் குழுக்கள் இருக்கிறதே... அவர்களும் நம்மைப் போல ஆங்கிலேய ஆதிக்கத்தால் துன்பப்படுகிறார்களே, அவர்களைப் பற்றி யார் கவலைகொள்வது? இனி, நான் வெறுமே சோஸா இனத்துக்கானவன் மட்டுமல்ல; ஒட்டுமொத்த ஆப்பிரிக்காவும் என் தாய் மண். ஆப்பிரிக்காவின் அனைத்து கறுப்பினத்தவனும் என் சகோதரன்' என்று உறுதி பூண்டார்.

க்ளார்க் பரி, ஹீல்டு டவுன் எனப் படிப்படியாக வளர்ந்த அவரது கல்வியும் அரசியல் அறிவும், மேல்படிப்புக்காக வந்த ஹாரே கோட்டைக் கல்லூரியில் தான் பூரணம் அடைந்தது. இங்கு வந்த பிறகுதான் வாழ்க்கையில் முதன்முறையாக சோப்பு, பற்பசை ஆகியவற்றைப் பயன்படுத்தினார் மண்டேலா. அவர் கோட் சூட் அணியத் துவங்கியதும் இங்கு வந்த பிறகுதான். கல்லூரி மாணவர் தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்ட மண்டேலா, மாணவர்களுக்கு விடுதியில் வழங்கப் படும் மோசமான உணவை எதிர்த்துப் போராட்டத்தில் இறங்கினார். 'கல்லூரியை விட்டு அனுப்பிவிடுவோம்' என எச்சரித்தது கல்லூரி நிர்வாகம். ''உங்களது மிரட்டல்களால் எனது உணர்வை மழுங்கடிக்க முடியாது. போராட்டத்திலிருந்து ஒருபோதும் நான் பின்வாங்க மாட்டேன்'' என மண்டேலா உறுதியாகக் கூறவே, சொன்னபடியே செய்துவிட்டது நிர்வாகம். எனவே, மண்டேலா பாதியிலேயே படிப்பை முறித்துக்கொண்டு, மேக்வேணிக்குத் திரும்ப நேரிட்டது.

மன்னர் ஜோன்ஜின்டேபாவுக்கு மண்டேலா மீது கடும் அதிருப்தி! ''போய் மன்னிப்புக் கேட்டு, மீண்டும் கல்லூரியில் சேர்கிற வழியைப் பார்!'' என்று அறிவுறுத்தினார். ஆனால், மண்டேலாவின் தன்மான உணர்ச்சி அதற்குப் பிடிவாதமாக மறுத்துவிட்டது. அந்தச் சமயம், மன்னரின் மூத்த மகனான ஜஸ்டிசும் விடுமுறைக்காக அரண்மனைக்குத் திரும்பியிருந்தான். இருவரும் மீண்டும் ஒன்றாகச் சேர்ந்த சந்தோஷத்தில், தங்களின் வாழ்க்கைக்குப் புதிய வண்ணங்களைப் பூசிக்கொள்ள விரும்பி, வெளியில் சுற்ற ஆரம்பித்தனர். வயதும் இளமையும் அவர்களை வீட்டில் இருக்கவிடாமல் விரட்டிக்கொண்டே இருந்தது.

இந்தத் தருணத்தில்தான், சோஸா இன கோயில் குருவின் மகள் மேல் மையல் கொண்டான் ஜஸ்டிஸ். நண்பனின் காதலுக்குத் தூது செல்வது மண்டேலாவின் தலையாய பணி. ஜஸ்டிஸின் காதல் தீ குபுகுபுவெனப் பற்றி எரிந்துகொண்டு இருந்த நேரத்தில், மன்னருக்கும் அவரது மனைவிக்கும் இவர்களின் நடவடிக்கைகளில் சந்தேகம் எழ, உடனே நம்மூரில் சொல்வது போல 'காலாகாலத்தில் பையனுக்கு ஒரு கால்கட்டு போட்டால்தான் சரிப்படுவான்' என முடிவு செய்து, அதற்கான நடவடிக்கைகளிலும் தீவிரமாக இறங்க ஆரம்பித்தனர்.



ஒரு நாள், ஜஸ்டிஸ், மண்டேலா இருவரையும் அழைத்தார் ஜோன்ஜின்டேபா. ''எனக்கு வயதாகிவிட்டது. நான் கண் மூடுவதற்குள் பேரனோ, பேத்தியோ பார்த்துவிட்டுப் போக வேண்டும்'' என்றெல்லாம் பீடிகை போட்டு, இறுதியாக இருவருக்கும் பெண் பார்த்து முடித்துவிட்டதாகவும், கல்யாணத் தேதி நிச்சயிக்க வேண்டியதுதான் பாக்கி என்றும் சொல்ல, இருவருக்கும் அதிர்ச்சி!

அடுத்து அவர், இவர்களுக்காகப் பார்த்திருக்கும் பெண்களைப் பற்றிச் சொல்ல, அது அதைவிடப் பேரதிர்ச்சி தருவதாக இருந்தது. ஜஸ்டிசுக்குப் பார்த்திருந்த பெண்கூடப் பிரச்னை இல்லை; பணக்கார, தெம்பு வம்சத்துப் பெண். ஆனால், மண்டேலாவுக்கு அவர் பேசி முடித்த பெண் யார் தெரியுமா? தன் நண்பன் ஜஸ்டிசுக்காக, மண்டேலா எந்தப் பெண்ணிடம் தூது சென்றாரோ, அதே பெண்!

நெல்சன் மண்டேலா-3

மிகமிகத் துயரமான கண்ணீர்
ஒரு கறுப்பு நங்கையின் கண்ணீர்தான்
ஏனெனில், அவளை அழவைப்பது சுலபமல்ல!

-ரே டுரம்

முதன்முதலாக காதல் மூலிகையின் சாறு நெல்சனின் இதயத்தில் சொட்டியபோது, அவருக்கு வயது பதினைந்து. கறுத்த உதட்டுக்கு மேல் ரோமங்கள் எட்டிப் பார்க்கத் துவங்கியிருந்தன. தான் ஒருபெரிய மனிதனாகிவிட்ட தோரணையை உலகுக்கு அறிவிக்கும்விதமாக, நறுவிசான ஆடைகள் அணிந்து, ஒரு கனவானுக்கான தோரணையுடன் வலம் வருவார்.

முந்தைய பகுதிகள்

பகுதி - (02)
பகுதி - (01)







மேக்வேணி நகரில் இருந்த மெதடிஸ்ட் தேவாலயத்தில் ஞாயிறுகளில் பிரார்த்தனைக் கூட்டங்கள் நடைபெறும். ஜோன்ஜின்டேபாவின் மூத்த மகன் ஜஸ்டிசுடன் ஒரு ஞாயிற்றுக்கிழமை நெல்சன் அந்தத் தேவாலயத்துக்குப் புறப்பட்டார். ஜஸ்டிஸின் கண் சிமிட்டலில், அங்கு வரும் அழகான பெண்கள் குறித்த தகவலும் இருந்தது. ஆனாலும், அதற்கு முக்கியத்துவம் கொடுக்காதவராக நெல்சன் தன் வழக்கமான, மிடுக்கான ஆடைகளுடன், அதே சமயம் கிராமத்து மனம்கொண்டவராக தேவாலயத்தினுள் நுழைந்தார். தேவாலயத்தின் அமைதியினூடே, ஒரு பெண் புறா அடிக்கடி குறுக்கும் நெடுக்குமாகச் சடசடத்துப் பறந்தது. அவள் பெயர் விண்ணி. தேவாலய பாதிரியாரின் இளைய மகள். அவளது கண்களின் கறுப்பு, நெல்சனின் வெள்ளை இதயத்தோடு அன்று முதல் சதுரங்கம் ஆடத் துவங்கியது. பிரார்த்தனை முடிந்து தேவாலயத்துக்கு வெளியே வாசலில் கலைந்து போகும் கூட்டத்தினூடே, இருவரது கண்களும் சந்தித்துக்கொண்டன.



நெல்சன், செயல் வீரர். ஒரு பகல் பொழுதில், தேவாலயத்தின் அருகில் இருந்த மர நிழலில், விண்ணியிடம் தன் காதலைத் தெரிவித்து, சம்மதமும் பெற்றுவிட்டார். என்றாலும், நெல்சனுக்குள் ஒரு பதற்றம். காரணம், விண்ணியின் மேற்கத்திய நாகரிகமும், குடும்பத்தினரின் பணக்காரத்தனமும்!

அவர்களும் கறுப்பினத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்றாலும், பாதிரியாராக இருந்ததால் உள்ளூர ஒரு வெள்ளைத்தனம் அவர்களின் அனைத்து நடவடிக்கைகளிலும் இருந்தன. நெல்சனோ மனதளவில் இன்னும் கூணு கிராமத்து பழங்குடிச் சிறுவனாகவே இருந்தார்.

விண்ணிக்கு ஒரு அக்கா உண்டு. பெயர் நோமாம்போண்டோ. அவ ளுக்குத் தங்கையின் காதல் பற்றித் தெரிய வர, ''வேண்டாம் விண்ணி! நெல்சன் நமக்குச் சரிவராத கிராமத்தான்'' என வெளிப்படையாகத் தடுத்தாள். ''இல்லை அக்கா! அவர் நாகரிகம் தெரிந்தவர். நம் குடும்பத்துக்கு முற்றிலும் பொருத்தமானவராக இருப்பார்'' என்றாள் விண்ணி. ''அப்படியானால், அவனை நாளை வீட்டுக்கு அழைத்து வா. அவன் எப்படி நடந்துகொள்கிறான் என்பதைப் பொறுத்து முடிவுசெய்வோம்'' எனக் கூறியதோடு, வீட்டிலும் அனைவரிடமும் இந்தத் தகவலைப் பரப்பிவிட்டாள் நோமாம்போண்டோ.

பதினைந்தே வயதான நெல்சன், அன்று காலை வழக்கம்போல தனது தேர்ந்த உடையில் விண்ணியின் வீடு நோக்கிப் புறப்பட்டார். வீட்டை நெருங்க நெருங்க, உள்ளூர அவரது கிராமத்து மனம் நடுங்கத்துவங்கியது. ரெவெரண்ட் மட்யோலோவும் அவரது மனைவியும் மிகுந்த கண்ணியத்தோடு நெல்சனை வரவேற்றார்கள். அவர்களது கண்ணியமான வரவேற்பே நெல்சனுக்குள் இன்னும் பதற்றத்தை ஏற்படுத்தியது. அறிமுகப் படலங்களுக்குப் பிறகு, உணவு மேஜைக்கு நெல்சன் அழைக்கப்பட்டார். அங்கு அவருக்கான பரீட்சை காத்திருப்பது தெரியாமல், அவர்களோடு ஒருவராக மேஜை முன் அமர்ந்தார்.

உணவு பறிமாறப்பட்டது. வறுத்த கோழி இறைச்சியை, பாதிரியார் குடும்பத்தினர் முள் கரண்டியாலேயே லாகவமாக வெள்ளையர்களைப் போலச் சிறிது சிறிதாகத் துண்டித்துச் சாப்பிட, அதுவரை அப்படிச் சாப்பிட்டுப் பழக்கமில்லாத நெல்சனுக்கு வியர்த்துக் கொட்டியது. அனைவரின் கண்களும் தன்னை ஓரக்கண்ணால் வேவு பார்ப்பதை அறிந்துகொண்டதாலோ என்னவோ, அவர் கையில் பிடித்திருந்த முள் கரண்டிகளுக்கு நடுவே இறைச்சித் துண்டு சிக்காமல் நழுவி நழுவி விளையாட்டுக் காட்டத் துவங்கியது. தனது எண்ணம் பலித்துவிட்ட சந்தோஷத்தில் நோமாம்போண்டோ வெற்றிப் புன்னகை பூக்க, விண்ணியோ தன் கண் எதிரே காதலன் படும் அவமானங்களைக் காணச் சகியாதவளாகத் தலை திருப்பிக்கொண்டாள். ஒரு கட்டத்தில் அனைவரும் சாப்பிடுவதை நிறுத்தி விட்டு நெல்சனையே வேடிக்கை பார்க்க... சட்டென நெல்சன் இறைச்சித் துண்டைக் கையால் எடுத்துச் சாப்பிட ஆரம்பித்தார்.

அதன்பின், இரண்டு நாட்கள் கழித்து விண்ணியைத் தேடி, அவள் வீட்டுக்குச் சென்றார் நெல்சன். விண்ணி வெளியே வர மறுத்து விட்டதோடு, இனி தன்னைப் பார்க்க வர வேண்டாம் எனக் கூறிவிட்டதாக அவளின் அக்கா நோமாம் போண்டோ கூறி, கதவை அடைத்தாள். நெல்சன் கனத்த இதயத்துடன் வீதியில் இறங்கி நடக்க ஆரம்பித்தார்.

நெல்சனுக்குப் பதினாறு வயது. சோஸா இன வழக்கப்படி, ஓர் ஆண் மகனுக்கு 16 வயது ஆகிவிட்டால் அவன் முழுமையான மனிதனாகி விடுகிறான். அந்த வைபவத்தை அங்கீகரிக்கும் வகையில், குல வழக்கப்படி ஒரு சடங்கு நடக்கும். இந்தச் சடங்கைக் கடந்து வரும் ஆண்களுக்கு மட்டுமே சோஸா இனப் பெண்களைத் திருமணம் செய்து கொடுப்பர். இஸ்லாமியர்கள் செய்துகொள்ளும் சுன்னத் போலவே இந்தச் சடங்கும் என்றாலும், நான்கு நாட்களுக்கு முன்னதாகவே இன்னும் பலசம்பிரதாயங்கள் துவங்கிவிடும். இந்தச் சம்பிரதாயங்களின்படி, நெல்சனுடன் சோஸா இளைஞர்கள் 26 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அனைவரும் ஊருக்கு ஒதுக்குப்புறமாக மாபேசே நதிக் கரை அருகே பிரத்யேகமாக அமைக்கப்பட்ட குடிசைகளுக்குக் கொண்டுவரப்பட்டனர். அனைவரது ஆடைகளும் அகற்றப்பட்டு, அவர்களின் உடல் முழுக்க மந்திர வரிகள் வெள்ளை எழுத்துக்களால் எழுதப்பட்டன. அதன் பிறகு நான்கு நாட்களும் அவர்களின் ராஜாங்கம்தான். அவர்கள் முன் விரிந்து கிடந்த சுதந்திரத்தின் காரணமாக, திருட்டுத்தனமாக வேட்டையாடுவது, அருகில் வசிக்கும் பழங்குடிப் பெண்களிடம் சேர்ந்து ஆட்டம், பாட்டு என இரவுகள் முழுக்க அந்த நதிக் கரையில் உற்சாகமும் கும்மாளமுமாகப் பொழுதைக் கழித்தனர்.

சடங்கின் இறுதி நாளன்று, காலை விடியுமுன்னே கருக்கலில் அனைவரும் ஓடிச் சென்று ஆற்றில் குதித்தனர். பின் தங்களது குடிசை முன் வரிசையாக வந்து நின்றனர். குலப் பெரியவர்கள் மூதாதையர்களை அழைத்தபடி, கைகளில் கத்தியு டன் அவர்கள் முன் வந்து நின்று, மந்திரங்கள் ஓதி, சடங்குகள் செய்தனர். வாத்தியங் கள் பலமாக பின்னணி இசைக்க, வரிசை யில் முதலாவதாக நின்றவன், 'தியின்டோடா' என உரக்க அலறினான். 'தியின்டோடா' என்றால், 'நான் இன்று முதல் பெரிய மனிதனாகிவிட்டேன்' என்று அர்த்தம். நெல்சனின் முறையும் வந்தது. 'தியின்டோடா' என நெல்சனின் குரல் அதிர்ந்தது. சடங்குகள் முடிந்த கையோடு பிரத்யேகமாகக் கட்டப்பட்ட அந்த இரண்டு குடிசைகளையும், அந்த இளைஞர்களின் முன்பாகவே குலப் பெரியவர்கள் தீயிட்டுக் கொளுத்தினர். அதோடு அவர்களது விளையாட்டுத்தன மான சிறு வயதுப் பருவம் முடிந்து, வீரமும் தைரியமும் பொறுப்பும் நிறைந்த இளைய பருவம் துவங்குவதாகக் கூற, தான் இப்போது முழுமையான ஆண் மகனாக மாறிவிட்டிருப்பதை உணர்ந்தபடி, தன் முன் எரிந்துகொண்டு இருக்கும் குடிசைகளின் நெருப்பையே கூர்ந்து கவனித்தார் நெல்சன்.

சடங்குகளை நடத்திய பெரியவர் மெலிக்யுலி, அனைவரையும் தன் சைகையால் அமரச்செய்து, உரையாற்றத் துவங்கினார். ''நாம் இன்று அடிமைகளாக இருக்கிறோம். நமது வளமான தேசங்கள் வெள்ளையர்களின் கைகளில் இருக்கின் றன. நம்மைப் பெற்ற தாயை நாம் நமது கோழைத்தனத்தால் பலி கொடுத்துவிட்டு, இன்று அவர்களிடம் அடிமையாக வேலை செய்து உயிர் வாழ்கிறோம். இந்த அவமானத்திலிருந்து நாம் என்று விடுபடப் போகிறோம்?'' என்று அவர் பேசப் பேச, நெல்சனின் மனமும் உடலும் முறுக்கேறத் துவங்கின.

மறுநாள் வீடு திரும்பிய பிறகு, ஜோன்ஜின்டேபா கூறிய ஆப்பிரிக்க வரலாறுகள், நெல்சனைத் தன் எதிர்காலக் கடமைகள் குறித்து ஆழமாகச் சிந்திக்கவைத்தன.

தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுன்... ஏப்ரல் 6, 1652.

இதுதான் அந்தக் கறுப்பு நிலத்தில் முதன்முதலாக ஒரு வெள்ளை யன் கால் பதித்து அழுக்கை உண்டாக்கிய நாள். நெதர் லாந்திலிருந்து ஒருடச்சுக் கப்பலில் வந்து இறங்கிய ஜேன் வேன் ரிபீக் மற்றும் அவனு டன் காய்கறி இறைச்சி வியா பாரங்களுக்காக வந்த 90 பேரும் பிற்பாடு கொஞ்சம் கொஞ்சமாகத் தங்கள் வியாபாரத்தை விஸ்தரித்தனர். இதனால், வில் அம்புகளுக்கும் துப்பாக்கிகளுக்கும் சண்டைகள் நடந்தன. பழங்குடிகள் பெரும்பாலோர் விரட்டி யடிக்கப்பட... எஞ்சியவர்கள் அடிமைகளாகப் பணியமர்த்தப் பட்டனர். 1795ல் பிரிட்டிஷ் படை நுழைந்து, டச்சு வீரர்களை விரட்டி விட்டு, தென் ஆப்பிரிக்கா முழு வதையும் தன்வசமாக்கிக்கொண்டது. இதனை ஆப்பிரிக்காவின் சுலு இன வீரர்கள் பெரும்படை திரட்டி, மீண்டும் எதிர்த்தனர். வழக்கம் போல இந்த முறையும் தோல்வி. அதன் பின், தென் ஆப்பிரிக்கா முழுவதும் பிரிட்டிஷாரின் வசமானது.

அதுவரை, வேளாண்மை நிலமாக இருந்த ஆப்பிரிக்கா இரண்டு முக்கியக் கண்டுபிடிப்புகளின் விளை வாக, தொழில்வளம் மிக்க பூமியாக மாறியது. அத்தனை நாளும் ஆப்பிரிக்கச் சிறுவர்கள் உருட்டி விளையாடி வந்த கற்கள், ஒரு பிரிட்டிஷ்காரனின் பார்வையில் பட, அவன் அந்தக் கற்களை வாங்கிப் பார்த்ததும் மிகுந்த ஆச்சர்யத்துக்கு ஆளானான். அவை வெறும் கற்கள் அல்ல; வைரங்கள்! அப்புறம் கேட்க வேண்டுமா... அந்தப் பகுதிகளில் இருந்த கறுப் பினத்தவர்கள் அனைவரும் விரட்டியடிக்கப்பட்டார்கள். அது வெள்ளையர்களின் பண்ணையாக மாறியது. வைரச் சுரங்கங்கள் தோண்டப்பட்டன. தங்களுக்குச் சொந்தமான அந்த நில வளங்களைத் தாங்களே தோண்டி எடுத்துத் தலையில் சுமந்து, வியர்க்க விறுவிறுக்க நடந்து, வெள்ளையர்களிடம் தங்களது உழைப்பையும் பொருட்களையும் கொடுத்து அடிமைகளாகக் கூனிக் குறுகி நடந்தனர் பழங் குடிகள்.

1886ல் ஜொஹா னஸ்பர்க்கில் தங்கச் சுரங்கம் கண்டுபிடிக்கப் பட, வெள்ளையர்களின் வளம் கொழிக்கும் நாடாக மாறியது ஆப்பிரிக்கா. இதனால் ஏற்கெனவே அங்கு குடியேறிய டச்சு வம்சாவளி வெள்¬ளையர் களுக்கும் பிரிட்டிஷ் வெள்ளையர் களுக்கும் 1889ல் போர் மூண்டது. போரின் முடிவில் இரு தரப்பினரும் சமாதான உடன்படிக்கைகள் செய்துகொண்டனர். அதன்படி, இரண்டு வெள்ளை இனத்தவர்களும் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள, மண்ணின் மைந்தர்களான கறுப்பினத்தவர்கள் ஆட்சி, அதிகாரம், வாக்குரிமை என அனைத்திலிருந்தும் ஓரங்கட்டப்பட்டனர்.

தங்களின் முழுமையான இந்த வரலாற்றைத் தன் வளர்ப்புத் தந்தையான ஜோன்ஜின்டேபாவிடமிருந்து நெல்சன் தெரிந்துகொண்ட அன்று இரவு, அவருக்குத் தூக்கம் வரவில்லை. புரண்டு புரண்டு படுத் தார்.

'தன் மக்களுக்கு இழைக்கப் பட்ட அநீதிகளுக்கு யார் தீர்ப்பு கொடுக்கப்போகிறார்கள்? இந்தச் சமூகம் என்றைக்கு முழு விடுதலை பெறும்?' என்ற கேள்விகள் அவரைக் குடைந்துகொண்டே இருந்தன.

நெல்சன் மண்டேலா-1

மாறுதல் என்பது சொல் அல்ல,
அது ஒரு செயல்!
அது போர் அல்ல, அமைதி!
குழந்தைகளின் விரல்களைத் தொட்டுக்கொண்டிருக்கும்
விதைகளின் பச்சையமே அது!

-மூஸியாஅபுஜமால்

உலகம் இரண்டாக இருக்கிறது. ஒன்று, கறுப்பு... மற்றொன்று வெள்ளை.

கறுப்பு, தீமையின் நிறமாகவும் வெள்ளை, நன்மையின் நிறமாகவுமென, காலங்காலமாக ஒரு தவறான எண்ணம் உலகம் முழுக்க மனித மனங்களில் புரையோடிக்கிடக்கிறது. ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன், நாடு பிடிக்கும் வெறியில், கப்பல்களில் புறப்பட்ட ஐரோப்பிய வெள்ளை இனத்தவர்களின் திட்டமிட்ட சதியினால் விதைக்கப்பட்ட நஞ்சு இது! மக்களை மனரீதியாகவும் அடிமைப்படுத்த அவர்கள் உருவாக்கிய தந்திரங்கள்தான் எத்தனையெத்தனை!

அவர்கள், கதைகளை உருவாக்கினர். அந்தக் கதைகளின் தேவதைகளுக்கு வெள்ளை ஆடைகளும், சாத்தான்களுக்குக் கறுப்பு ஆடைகளும் அணிவிக்கப்பட்டன. அவர்கள் செஸ், கேரம் என விளையாட்டுக்களைக் கண்டுபிடித்தனர். அந்த விளையாட்டுகளிலும் கறுப்பு மதிப்புக் குறைவான நிறமாகவே தீர்மானிக்கப்பட்டு, நம் மனதினுள் இயல்பாக இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டது. அவர்கள், இறப்பு வீடுகளின் துக்கத்தை வெளிப்படுத்தக் கறுப்பு வண்ணத்தைத் தேர்ந்தெடுத்தனர். மண வீடுகளுக்கு வெள்ளை நிறத்தை அடையாளப்படுத்தினர். இவ்வாறாக, அவர்கள் உருவாக்கிய புரை இன்னும் நம்மைவிட்டு விலகவில்லை.



ஆனால், அவர்கள் உருவாக்கிய விதிகளில் ஒன்றுமட்டும் இன்று நிறம் மாறிஇருக்கிறது. அது சமாதானத்தின் நிறம். அவர்கள் வெள்ளையாக அதன் நிறத்தை உருவாக்கியிருந்தனர். ஆனால், அதன் நிறம் இன்று கறுப்பு. அவர் பகைவருக்கும் அருளிய நன்நெஞ்சர்... 'நெல்சன் மண்டேலா'!

1990, பிப்ரவரி 11... ஞாயிற்றுக் கிழமை மாலை, நேரம் சரியாக 4.15.

தென் ஆப்பிரிக்காவின் புகழ்பெற்ற விக்டர் வெர்ஸ்டர் சிறைச்சாலையின் வாசலில், கறுப்பும் வெள்ளையுமாக லட்சக் கணக்கில் மக்கள் கூட்டம். அரை வட்ட வடிவில் பெருந்திரளாக நிற்கும் அவர்களது கண்கள் அனைத்தும் இறுக மூடிக்கிடக்கும் இரும்புக் கதவையே பார்த்துக்கொண்டு இருக்கின்றன. இன்னும் சில நிமிடங்களில் மகத்தான தலைவன் மண்டேலா, அந்த வாசல் வழியாக வெளிவரப் போகிறார்.



அவர்கள் உற்சாகத்துடன் பாடும் விடுதலைப் பாடலும் வாத்தியக் கருவிகளின் இசையுமாக, ஆப்பிரிக்கக் கண்டமே அதிர்வதை உலகம் உன்னிப் பாகக் கவனிக்கிறது. அவர்களின் கரங்களில் கறுப்பு, பச்சை, மஞ்சள் நிறத்திலான ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் கொடிகள் படபடக்கின்றன. சர்வதேசச் செய்தி நிறுவனங்கள், ஆயிரக் கணக்கான கேமராக்களுடன் அந்த அற்புத விநாடிக்காகக் காத்திருக்கின்றன. உலக வர லாற்றில் எந்தச் சிறைக்கு முன்பும் இப்படியரு கூட்டம், ஒரு விடுதலையின் பொருட்டுக் கூடியதில்லை!

அதோ, சிறைக் கதவுகளின் க்ரீச்சிடும் சத்தம். கறுப்புச் சூரியன், கதவுகளுக்கு அப்பால் காத்திருக்கிறது. வெளியே லட்சக்கணக்கான கண்கள் இமைக்காமல் காத்திருக்கின்றன. அதோ, கதவு திறக்கிறது! 27 வருடங்களுக்குப் பிறகு, அவரைக் கண்ட வெறியில் கேமராக்கள் பெரும் ஒளி வெள்ளத்துடன் அவரது முகத்தை முற்றுகையிடுகின்றன. ''லாங் லிவ் நெல்சன் மண்டேலா!'' குரல்கள் விண்ணைப் பிளக்கின்றன. கண்களில் நீர் கொட்ட, பரவசத்தில் அவர்களது கைகள் இதயத்தில் கூம்பி நிற்கின்றன.



நானூறு வருட அடிமைச் சங்கிலிகளை அடித்து நொறுக்கிக்கொண்டு, அதோ அவரது பாதம் பூமியை முத்தமிடுகிறது. 72 வயதிலும் உறுதிமிக்க, கம்பீரமான அந்த உயர்ந்த மனிதர் தன் ஒளி சிறக்கும் கண்கள் வழியாக, தன் நிலத்தையும் மக்களையும் நோக்கிப் புன்னகைத்துக் கை உயர்த்தி அசைக்கிறார்.

ஆப்பிரிக்கக் கண்டத்தின் தென் கோடியில் விரிந்த நிலப்பரப்பு... தென் ஆப்பிரிக்கா. அதன் தலைநகரமான கேப் டவுனில்இருந்து கிழக்கே ஏறக்குறைய 800கி.மீ. தொலைவில் ஒரு மாகாணம். அதன் பெயர், ட்ரான்ஸ்கீய்.

கிழக்கே நீலத் தண்ணீராக விரிந்துகிடக்கும் இந்தியப் பெருங் கடலுக்கும் வடக்கில் உயர்ந்த ட்ராகன்ஸ்பெர்க் மலைத் தொடருக்கும் இடையே காணப்படும் அழகிய நிலப் பரப்பின் பெயர்தான் ட்ரான்ஸ்கீய். ஆயிரக்கணக்கான ஓடைகளும் நதிகளும் அந்தப் பூமிக்கு இடையறாது உயிர்த் தன்மை கொடுத்துக்கொண்டு இருப்பதால், எங்கு திரும்பினாலும் பச்சைப்பசேலெனச் சமவெளிகள். சுருக்கமாகச் சொல்வதானால், அது உருளும் மலைத்தொடரின் மேலமைந்த வசீகர வனப்பரப்பு.

அப்படிப்பட்ட எழில் கொஞ் சும் மாகாணத்தில், சுலு மற்றும் சோஸா என இரண்டு இனக் குழுக்கள் தங்களுக்குள் சண்டையும் சமாதானமுமாக வாழ்ந்து வந்தனர். அவர்களுள் பெரும் பான்மையினராக இருந்த சோஸா இனத்தைச் சேர்ந்தவர் காட்லா ஹென்றி. காட்லா, அந்தப் பகுதியில் நாட்டாமை. அவர்களை ஆண்ட 'தெம்பு' அரசர்கள் அவருக்கு அந்தப் பதவியை அளித்திருந்தனர். காட்லாவுக்கு 4 மனைவிகள், 13 குழந்தைகள். மனைவிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந் தால் மட்டுமே, அங்கு குழுத் தலைவர்களுக்கு மரியாதை கிடைக்கும். அது சோஸா இனக் குழுவில் எழுதப்படாத விதி. ஒவ்வொரு மனைவிக்கும் தனித் தனி வீடுகள். வலக்கை மனைவி, இடக்கை மனைவி, பெரிய மனைவி, துணை மனைவி என ஒவ்வொரு மனைவிக்கும் பட்டப் பெயர்கள் வேறு. இதில் காட்லாவின் மூன்றாவது மனைவியும், பட்டப்படி வலக்கை மனைவி யுமானவர் 'நோசெகேனி பேனி'.



'கூணு' என்பது பேனி வசித்த கிராமத்தின் பெயர். அந்தக் கிராமம் முழுவதுமே சோளக்கதிர் வயல்வெளிகளால் ஆனது. அந்தக் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடிசைகள் இருந்தன. அனைத்தும் ஒன்றே போல் தோற்றம்கொண்டு இருப்பவை. ஒரு மரம் நடப்பட்டு, சுற்றிலும் வட்டமாக மண் சுவர் எழுப்பப்பட்டு இருக்க... மேலே கூரை, கீழே சாணம் மெழுகிய குளிர்ச்சியான தரை. அந்தக் குடிசைக்குள் நுழைவதற்கு, ஓர் ஆள் குனிந்து செல்லக் கூடிய ஒரே ஒரு வழி. அதுதான் வாசல். இந்த இருண்ட சிறிய வீட்டில், 1918ம் வருடம், ஜூலை 18ல் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு நடந்தேறியது. குடிசைக்கு வெளியே கூடியிருந்த சோஸா இனப் பழங்குடிப் பெண்கள் பேனியின் கதறலையும், உடன் ஒரு சிசுவின் அழுகுரலையும் கேட்டு, அதற்காகவே காத்திருந்தது போலத் தங்களது மூதாதையர்களையும் வனதேவதைகளையும் வாழ்த்தி, பாடல்களைப் பாடத் துவங்கினர். நாட்டாமையின் குழந்தையாதலால், அவர்களிடம் களிப்பும் சந்தோஷமும் அதிகமாகவே இருந்தது. சற்று தொலைவில் இருந்த ஆண்கள் வாத்தியக் கருவிகளை இசைத்து, பாடல்களைப் பாடி மகிழ்ந்தனர்.

குடிசையிலிருந்து, கையில் ஓர் ஆண் சிசுவுடன் ஒரு முதியவள் வெளியே வந்து, குல வழக்கப்படி வானத்துக்கும் பூமிக்கும் குழந்தையைக் காண்பித்துவிட்டு, உள்ளே எடுத்துச் சென்றாள். தொடர்ந்து அந்த வனப் பகுதியில் வாத்தியங்களின் இசை எதிரொலித்துக்கொண்டு இருந்தது. சில நாட்களுக்குப் பின், காட்லா வந்தார். தாதி, மகனைத் தூக்கி வந்து அவரின் கைகளில் கொடுத்தாள். காட்லா பெருமையுடன் தன்னைச் சூழ்ந்திருப்பவர்களை ஒரு முறை பார்த்தபடி, தன் மகனைத் தூக்கி முத்தமிட்டார். 'ரோலிலாலா' என உரக்கக் கூவினார். எல்லோரும் 'ரோலிலாலா... ரோலிலாலா' என அந்தப் பெயரைத் திரும்பத் திரும்பச் சொல்லி மகிழ்ந்தனர்.



இதர சோஸா பெண்களைப் போலவே, குழந்தை ரோலிலாலாவை பேனி இடுப்பில் கட்டப்பட்ட துணியால் எப்போதும் முதுகில் கங்காருவைப் போலச் சுமந்தபடி, வீட்டு வேலைகளையும் வெளி வேலைகளையும் செய்துவந்தாள்.

ரோலிலாலா ஐந்து வயதாகி ஓரளவு பேச ஆரம்பித்ததுமே, தனியாகக் குடிசையைவிட்டு வெளியில் சுற்ற ஆரம்பித்துவிட்டான். நண்பர்களுடன் ஆடு மாடுகளை மேய்க்கச் சென்று, ஆறு குளங்களில் கண்கள் சிவக்க நீச்சலடிப்பதும், உண்டிவில்லால் பறவைகளைக் குறி பார்த்து அடிப்பதும், மரங்களில் ஏறித் தேனை எடுப்பதும், தூண்டில் போட்டு மீன்களைப் பிடிப்பதும், பசுக்களின் மடியிலிருந்து நேரடியாக வாய் வைத்துப் பாலைக் குடிப்பதும் அவனுக்குப் பிடித்தமான விளையாட்டுக்கள். அதே போல, இரண்டு எதிர் எதிர் அணிகளாகப் பிரிந்து குச்சியால் குச்சியைத் தள்ளிச் செல்லும் ஆட்டம் என்றால், சோறு தண்ணி இல்லாமல் மெய்ம்மறந்து ஆட்டத்தில் இறங்கிவிடுவான். பேனி வந்து எத்தனை முறை கூப்பிட்டாலும் போக மாட்டான்.

வீட்டில் காட்லா வரும் சமயங்களில் மட்டும் தலைகீழ்! அவரது மடியில் அமர்ந்தபடி, தங்களது சோஸா மக்களின் பழைய போர்களைப் பற்றியும், அவர்கள் வேட்டையாடும்போது ஏற்பட்ட துணிச்சலான அனுபவங்களையும் திரும்பத் திரும்பக் கேட்டு மகிழ்வான்.

ஏழு வயதானபோது, ரோலிலாலாவை அருகில் வெள்ளைக்காரப் பெண்மணி நடத்தி வந்த பள்ளியில் சேர்க்க அழைத்துச் சென்றார் காட்லா. அந்தப் பள்ளியின் சட்டதிட்டங்களின்படி, அங்கு படிக்க வரும் ஆப்பிரிக்கச் சிறுவர்களுக்கு அந்த வெள்ளைப் பெண்மணியே ஓர் ஆங்கிலப் பெயரைச் சூட்டுவாள். அதன் பிறகு அந்தப் பெயர்தான் நிலைத்துவிடும். அதன்படி ரோலிலாலாவுக்கு 'நெல்சன்' என்று பெயர் சூட்டி, ''இனி, அந்தப் பெயரில்தான் அவனை அழைக்கவேண்டும்'' என்றாள் அந்த வெள்ளைக்கார ஆசிரியை.

காட்லாவால் அந்தப் பெயரைச் சரியாக உச்சரிக்க முடியவில்லை. வாய்விட்டுச் சொல்லிப் பார்த்தார். வரவில்லை. காட்லா, மகனைப் பள்ளி யில் விட்டுவிட்டு வீடு திரும்பினார். மகனின் இந்தப் பெயர் மாற்றத்தின் காரணமாக அவருக்குள் எதையோ இழந்த தவிப்பு. அவனைத் தன்னிட மிருந்து யாரோ பிடுங்கிக்கொண்ட தைப் போல ஓர் உணர்வு!